
"ஏலே.. அங்கன அம்புட்டு பேரும் காத்திருக்காக வெரசா வாலே". இது சண்முகம் அவருக்கு இதுதான் முதல் அணுபவம். கல்யாணத்தை ரொம்ப சிறப்பா செய்யணும்னு ரொம்ப நாளா மனக்கணக்கு போட்டிருந்தவரு இன்னைக்கு செயல்படுத்திக்கிட்டு இருக்காரு . "பொன்னுசாமி தாத்தாவை மொதல்ல போயி கூட்டியாங்கள அவுகதான் தாலி எடுத்து கொடுக்கனும்". சண்முகம் ஆளுகள விரட்டிக்கொண்டிருந்தார். பொன்னுசாமி தாத்தான் குடும்பத்திலேயே ரொம்ப மருவாதயானவுக, நல்ல வாழ்க்கை வாழ்ந்தவுக. அதனால எந்த நல்ல காரியன்னாலும் அவுகளுக்குத்தான் மொத மரியாதை. அவுக ஆரம்பிக்காம எந்த காரியமும் நடக்காது. "என்னல சண்முகம், என்னய கூட்டியார ஒரு ஆளா. நாந்தேன் ஓன் பின்னாடிய நிக்குதேனுல" இது பொன்னுசாமி தாத்தா.
"முகூர்த்தம் முடியிறதுக்கு இன்னும் அரை மணி நேரந்தேன் கெடக்கு, எல்லாம் ரெடியாயிடுச்சு. ஊருல்ல உள்ள பெரிய ஆளுக எல்லாம் வந்தாச்சு, பக்கத்து ஊருல உள்ள சர்தார் பாயி கூட வந்துட்டாரு சின்ன வயசுல இருந்து ஃப்ரன்டு. நாம எல்லாம் சரியா பண்ணிட்டோம்ல? எல்லாம் அந்த கடவுள்தான் காப்பாத்தனும். மாப்பிள்ளை லட்சனமா இருக்காரு, பொன்னு சந்தோசமா இருக்கனும். இந்த சமையல்காரன் எல்லா வேலையும் பாத்துட்டானா? கொறஞ்சது ஆயிரத்து ஐநூரு பேராவது இருப்பாங்க போல இருக்கு, சாப்பாடு பத்திடுமா?. எத்தனை பேர வச்சு வேல வாங்குனாலும் பத்தாது போல, அங்கனயும் இங்கனயுமா கொஞ்சம் கொற தெரியுது." இது சண்முகம் மணமேடையில ஏறுறதுக்குல்ல இத்தனையும் நெனக்கிறாரு.
அவருடைய பொன்ன அப்பதான் மணமேடையில பாக்குறாரு. "எத்தனை அழகு, இத்தனை வருசமா இதுக்காகத்தான் க்ஷ்டப்படேன். லட்சுமி மாதிரியில்ல இருக்கா, நான் கூட பயந்துக்கிட்டேயில கெடந்தேன். கடவுளா பாத்து எல்லாம் நல்லபடியாக்கிட்டாரு".
எனக்கு இவ பொறந்த அப்புறம்ந்தான் வாழ்க்கையே மாறிடுச்சு. ஏனோ தானோன்னு இருந்த என்னை ரொம்பவே மாத்திட்டா. நான் பதினைஞ்சு வருசமா கடிச்சுக்கிட்டு இருந்த நகம், ஆறு வருசமா அடிச்சுக்கிட்டு இருந்த சிகெரெட்டு, குடிச்சுக்கிட்டு இருந்த தண்ணி, ஊர சுத்தி செலவழிச்சுக்கிட்டு இருந்த காசு அம்புட்டயும் மாத்திப்புட்டா. தேவதை மாதிரி வந்து தெசயயே திருப்பிப்புட்டா. அப்புறம் என்னையும் நாலு பேறு மனுசனா மதிச்சானுவுக. புதுசா வூடு கட்டி, சாமான் சட்டு வாங்கி போட்டு, பொன்டாட்டி புள்ளகளுக்கு நகைய நட்ட கையுல, கழுத்துல மாட்டி அது ஒரு மாதிரியாய் லைஃப்பே மாறிடுச்சு. இவ மட்டும் ஆம்புள புள்ளயாய் பொறந்து இருந்தா இவ்வளவும் நான் பண்ணியிருப்பனான்னு தெரியல? இவ மேல சொல்லத்தெரியாத பிரியம் வந்துருச்சு. இப்ப எதுக்கு எனக்கு இந்த நெனப்பெல்லாம். மொதல்ல முகூர்த்த வேலையை பாப்போம்.அய்யரு, மந்திரம் ஓதி முகூர்தத்துக்கு ரெடியாயிட்டாரு. இந்த மாதிரி ஒரு சந்தோசாமான நாளுக்குத்தான், ரொம்ப நாளா க்ஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன். அது இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்கப்போவுது. அய்யரு கெட்டிமேளம்ன்னு சொன்னவுடன், பொன்னுசாமி தாத்தா தாலிய எடுத்துக்கொடுக்க, மாப்பிள்ளை எம்பொன்னு கழுத்துல தாலியக்கட்டினாரு. "எவ்வளவு பெரிய காரியத்த முடிசுட்டல. ரொம்ப சந்தோசமா இருக்குல" என்று பொன்னுசாமி தாத்தா வாழ்த்த, எனக்கு என்னவோ தேசிய விருது கெடச்ச மாதிரி இருந்தது.
"என்னல சண்முகம், இங்க என்னல பண்ணுத அங்கன அம்புட்டுபேரும் காத்துக்கிடக்காவுக வெரசா வாலே" என்று பொன்னுசாமி தாத்தா கூட்டிட்டு போனாரு. என்னால இரண்டு அடி கூட எடுத்து வைக்க முடியல. பொன்னுசாமி தாத்தா என்னய பார்த்து "என்னல இது, மனச தேத்திட்டு வாலே எல்லாம் கொஞ்ச நாளுல சரியாப்போயிடும்" என்று கையை புடிச்சி கூட்டிட்டுப்போனாரு.
அங்கன... அங்கன... எம்பொன்னும், மாப்பிள்ளையும், கெளம்புறதுக்கு ரெடியாயிருக்காங்க. எம்பொன்னு ஓடி வந்து என் காலில் விழுந்து, நான் போயிட்டு வரேப்பான்னு அழுகுது. நான் அழக்கூடாதும்மா, அப்பா இங்கனதான் இருக்கேன், கூப்பிட்ட ஒடன ஒன்ன ஓடியாந்து பார்ப்பேன்னு சொல்லுறதுக்குல்ல ஏன் மனசு வெடிச்சு உள்ளுக்குள்ள அழ ஆரம்பிரச்சிருச்சு. பொன்னுசாமி தாத்தா யேன் தோலுல கைய வச்சு எல்லாம் நல்ல படியாய் முடிஞ்ச்சிச்சுன்னு சொல்ல.. எல்லாரும் போயிட்டாக. நான் இருபது வருசமா பார்த்து வளத்து ஆளாக்கின அன்ப பொழிஞ்ச என் தேவதையை, யாரோ மகராசன் கூட்டிட்டு போயிட்டான்.ஏல... வெரசா வாலே.. தண்ணி காத்திட்டுக்கெடக்குள்ளே. இது நம்ம சர்தார் பாய் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து குடிச்சு 20 வருசமாச்சு.

No comments:
Post a Comment